வெள்ளி, ஏப்ரல் 01, 2016

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும் - 3
அடுத்ததாக நமது பகுதியிலுள்ள ஊரைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் எவ்வாறெல்லாம் தமது உத்தியைக் கையாண்டிருக்கின்றார் என்று காண்போம்.

நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித சாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்தத் திருப்புகழ் பாடல் பல வகைகளில் மிகச் சிறந்தது. பக்தி நிலை, சந்தத்தமிழ் பிரவாகம், சொற்சுவை, பொருட்சுவை, நயங்கள், எடுப்பு, தொடுப்பு இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

முதல் நான்கு வரிகளில் முருகன் புகழ் பாடும் அருணகிரிநாதர் தமது வழக்கமான ஹைபர்லிங்க் உத்தியை ஐந்தாவது வரியிலிருந்து எட்டாவது வரி வரை கையாண்டு பிரமிக்க வைக்கின்றார்.

ஒரு நாடு என்பது எவ்வாறிருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் வரிகளில் ஆரம்பிக்கின்றார். கேட்பவர்க்கெல்லாம் ஈதலும், பல கோலாகல பூஜையும், வேதங்களை ஓதலும், குண ஆசார நீதியும், மக்கள் மனதில் ஈரமும், குருவை மதித்து அவர் தம் சீர்பாத சேவையும் புரிவது தான் ஒரு நல்ல நாடு என்று இலக்கணம் சொல்லும் அருணகிரியார், அவ்வாறு ஏழ் தலமும் புகழ்கின்ற வகையில் இருப்பது காவிரியால் விளைகின்ற சோழ மண்டலம் என்று புவியியலும் தொட்டுத் தொடர்கின்றார்.

அப்படிப்பட்ட சோழ மண்டலத்தில் மனோகர ராஜ கம்பீரத்துடன் நாடாளும் வயலூரில் வீற்றிருக்கும் முருகனைக் காண்கின்றார். அங்கிருந்து திருவாரூர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் கதைக்கு ஹைபர்லிங்க் தருகின்றார்! ஆதரம் பயில் ஆரூரர் தோழமை கொண்டு அவரோடு முன்னாளில் அழகான வெள்ளை நிறப் பரியின் (குதிரையின் ) மீதேறி கயிலை சென்று "ஆதிய‌ந்த உலா" எனும் ஆசு கவி பாடியவர் யார்? ஒரே வரியில் பல கதைகள் சொல்லும் வல்லமை அருணகிரியாருக்கு மட்டுமே இருக்க இயலும்!

சைவக் குரவர் நால்வரில் சுந்தர மூர்த்தி அடிகளாருடன் கயிலை சென்று "ஆதியந்த உலா" எனும் நூலியற்றிப் பாடியவர் சேரமான் பெருமான்

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு.

இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரரின் உற்ற நண்பர். சேர நாட்டை ஆண்டவர். சிவனை மறவாத சிந்தையுடையவர். இவர் தினமும் தம்முடைய சிவபூஜையின் முடிவில் நடராஜப் பெருமானாரின் சிலம்பொலி கேட்டு மகிழும் பாக்யம் பெற்றவர். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் சிலம்பொலி கேட்கவில்லை என்பதால் ’இனி உயிரை மாய்த்துக் கொள்வதே தக்கது’ என எண்ணி உடைவாளைத் தம் கழுத்திற்குக் கொண்டு சென்றார்.

அப்போது திடீரென சிலம்பொலி மிகுதியாகக் கேட்டார்.

”தில்லையில் சுந்தரன் நம்மைத் தீந்தமிழில் பாடி வழிபட்டான். அதிலேயே யாம் மூழ்கி விட்ட காரணத்தால் காலதாமதம் ஆயிற்று” என அசரீரியாய் அருளினார் சிவபெருமான்.

அதைக் கேட்ட சேரமான் உடனே தில்லை சென்று நடராஜர் மீது பொன் வண்ணத் தந்தாதி பாடி வணங்கினார். சுந்தரரைச் சந்தித்து அவருடன் நட்பு பூண்டார். திருவாரூர் மும்மணிக்கோவை என்பதும் சேரமான் இயற்றியதே!
சுந்தரரும் சேரமான் பெருமானும் வானுலகம் சென்றனர்.

இறைவனிடத்திலிருந்து வந்த தேவ வாகனமாகிய வெள்ளை யானையில் சுந்தரர் செல்ல, ஒரு வெள்ளைக் குதிரை மீது ஏறிச் செல்கிறார் சேரமான்

இப்போது எதற்காக சுந்தரரும் சேரமானும் என்று சிந்தித்தால், அங்கே தான் அருணகிரிநாதரின் உத்தி புலப்படும்! சேரமான் பெருமானின் நாடு கொங்கு (கேரளம் + தமிழ்நாட்டின் எல்லைப் பகுதி). அந்த கொங்கு நாட்டில் நமது கோவைக்கு அருகிலிருக்கும் பழனி மலையில் (ஆவினன் குடியில்) வீற்றிருக்கும் முருகனைப் பாடும் வகையில் தான் இத்தனை கதைகளையும் பாடி சோழ மண்டலத்தினின்று கொங்கு மண்டலத்திற்கு ஹைபர்லிங்க் தருகின்றார்!

(தொடரும்)

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்: 2

அருணகிரிநாதர் காலத்தில் அண்ணாமலையை ஆண்ட பிரபுடதேவ மஹாராஜன் சபை. அருணகிரிநாதரின் பெருமை நாடெங்கும் பரவுவது பொறாத சம்பந்தாண்டான் பொறாமையால் பிரபுடதேவ மஹாராஜனைத் தூண்டி விட்டு அருணகிரி நாதருக்குக் கிட்டிய தெய்வ அருளை நிரூபிக்கச் சொல்கின்றான். அருணகிரிநாதரும் முருகனை அழைத்தார். எவ்வாறு அழைத்தும் முருகன் வரவில்லை. கண்மூடி அகக்கண்ணில் கண்ட போது முருகனை தாய் காளி மடியில் உட்கார வைத்து இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது! சம்பந்தாண்டான் ஹோமம் செய்து காளியிடம் முருகனை வரவிடாது செய்யுமாறு வேண்டிக் கொண்டதும் தெரிந்தது.

அப்போது பாடியது தான் இந்தத் திருப்புகழ் பாடல்.

அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே

இப்பாடலில் சொல், பொருள், நயம் அனைத்தும் இனிமை. நாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற, ஒவ்வொரு இடமாகத் தொட்டுச் செல்லும் 'ஹைபர்லிங்க்', பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதுமாக‌ இருக்கின்றது!

அதல பாதாளத்தில் இருக்கும் ஆதிசேடன் ஆட, மேலே இருக்கும் மேருவும் ஆட, சிவனின் ஆடல் முத்திரைக்கு ஏற்ற வண்ணம் ஆடிய‌ காளியும் ஆட (காளி ஆட ஆரம்பித்தால் முருகனைப் பிடித்து வைத்திருக்க முடியுமா?!), சிவனும் ஆட, அங்கிருக்கும் பூதக் கணங்களும் ஆட, சரஸ்வதி ஆட, பிரம்மா ஆட, தேவர்கள் யாவரும் ஆட, சந்திரன் ஆட, லட்சுமி ஆட, விஷ்ணு ஆட, மயிலும் ஆட நீயும் ஆடி வர வேண்டும் என்கின்றார் அருணகிரியார். இதில் எத்தனை இணைப்பு இருக்கின்றது என்று பாருங்கள்.

அத்தோடு விட்டாரா? கதாயுதத்தை விடாமல் வைத்திருந்த பீமன் விடும் பாணங்களால் துரியோதனின் சேனைகள் பொடியாக உதவியவரும், கதறும் பசுக்கூட்டத்தை மீட்க உதவியவரும், விஜயனின் தேரோட்டி பாஞ்சசன்யம் எனும் தனது சங்கத்தை ஊதியவரும், அலைமோதுகின்ற பாற்கடலில் (உததி) சாய்பவரும், உலகத்தை மூன்றடிகளால் மூடிய பாதங்களைக் கொண்டவரும், கருடனை (உவணம்) ஊர்தியாகக் கொண்டவருமான மகாமாய விஷ்ணுவின் மருமகனே என்று மீண்டும் விஷ்ணு அவதாரங்களின் மகிமையைத் தொட்டுக் காட்டுகின்றார்.

இறுதியாக, தான் இருப்பது பிரபுடதேவ மஹாராஜன் சபையல்லவா? அதற்கும் தொடர்பு வேண்டுமென்று அன்றலர் மலர் சூடும் பிரபுடதேவ மஹாராஜன் உளமும் ஆட வாழ்கின்ற முருகனே என்று முடிக்கின்றார். இப்பாடலைப் பாடி முடித்ததும் முருகன் பிரத்யட்சமாக பிரபுடதேவ ராஜன் சபையில் காட்சியளித்தான். சம்பந்தாண்டான் வெட்கித் தலைகுனிந்தான்.

எந்த ஒரு தகவல் தொகுப்பையும் மனனம் செய்வதற்கு எளிய வழிமுறையாக ஒன்றைக் கூறுவார்கள். தகவல்களை ஏதேனும் ஒரு வழியில் ஒன்றுக் கொன்று தொடர்பு படுத்தி முதல் தகவலை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் அதன் தொடர்ச்சியாக தகவல் தொகுப்பு முழுவதும் நமக்கு நினைவுக்கு வரும். இப்பாடலில் ஏற்கனவே அருணகிரியார் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதால் இப்பாடலை மனனம் செய்வது மிகவும் எளிதாகும்.

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

திருப்புகழும் ஹைபர்லிங்க்கும்...

ஏதேனும் தகவல் தேவையென்றால் நூலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகங்களைத் தேடிப் பிடித்துத் தெரிந்து கொள்ளும் பழக்கம் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து விடக்கூடும். பூகோளமே இன்று கூகுளுக்குள் தான் எனுமளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் முந்திய தமிழ் விதி இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இன்றைய இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆணிவேராக இருப்பது இணையம் என்றால் அந்த இணையம் முழுதும் துளிர் விட்டுப் பரவி இருக்கும் இலைகளாக ஹைபர்லிங்க் எனப்படும் மீத்தொடுப்புகளைச் சொல்லலாம்.

ஒரு தகவலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அது தொடர்பான அல்லது தொடர்பேதும் இல்லாத மற்றொரு தகவலுக்கு நாம் செல்வதற்கு ஆதாரமாக இருப்பது இந்த ஹைபர்லிங்க். Linear எனும் ஆங்கிலச் சொல்லுக்கு எதிர்ச்சொல் hyper. நேரியல்பான அல்லது வரிசைக்கிரமமாக வாசிக்காமல் நம்மை அங்கும் இங்கும் தாவித் தாவிப் படிக்க வைப்பதால் தான் அது ஹைபர்லிங்க் எனப்படுகின்றது.

இந்த ஹைபர்லிங்க் சமாச்சாரம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல!

அக்காலத்திலேயே நமது தமிழ் இலக்கியங்களில் இந்த ஹைபர்லிங்க் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக திருப்புகழில் ஹைபர்லிங்க் முறையை அருணகிரிநாதர் பல இடங்களில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். சொல்லப்போனால் இதுவே அவரது பாணி (ஸ்டைல்) என்று கூடக் கூறலாம்.

'முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் பாடத்துவங்கிய முதல் பாடலிலேயே இந்த ஹைபர்லிங்க் வருவதைக் காணலாம்.

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

முதலிரண்டு வரிகளில் முருகன் ஓம் என்ற பிரணவத்தின் பொருளை சிவனுக்கு உபதேசித்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஹைபர்லிங்க் ஆக அடுத்தடுத்த வரிகளில் விஷ்ணுவின் அவதாரங்களை அடுக்குகின்றார். 'பத்துத்தலை தத்தக் கணைதொடு' என்று இராமாயணத்தில் இருந்து ஹைபர்லிங்க் கொடுத்து 'ஒற்றைக்கிரி மத்தைப் பொருது' என்று மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து விட்டு 'பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல்' என்று பட்டப்பகலில் சூரியனைச் சக்கரத்தால் மறைத்த மகாபாரதக் காட்சியையும் தொட்டு அர்ச்சுனருக்குத் தேரோட்டிய பச்சைப்புயல் என்று வருணிக்கும் போது ஓ! இது வைஷ்ணவ இலக்கியமோ என்று நாம் நினைக்கின்ற போதிலேயே அப்பேர்ப்பட்ட விஷ்ணுவே மெச்சும்படியான பொருளே என்று முருகன் எனும் ஹோம்பேஜில் வந்து நிற்கின்றார்! அடுத்தடுத்த வரிகளில் கோரமான சூரபத்மனை வதைக்கும் போர்க்காட்சியையும் காட்டி ஒரே பாடலில் பல இணையப்பக்கங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தைத் தருகின்றார்.

சனி, ஜூன் 07, 2014

தா வரம்!

முத்து வள்ளிக் கிழங்கே
சற்றுங் காறாக் கத்திரியே
வழவழப்பு கண்ட‌தக் காளியே
விழுவிழுப்பு காணா வெண்டையே
உருக்க மணங்கூடு மாநெய்யே
பெருக்க‌ சுவைகுறையாப் பூசணியே
தோள்மட்டும் தொங்கும் புடலையே
நாட்பட்டும் மங்காச் செந்தேனே
அரிந்தெடுத்த இருகாற் பசுங்கீரையே
தெரிந்தெடுத்த முற்றா முருங்கையே
கரைதனிலே கடல்கண்ட உப்பளமே
சிவந்துந் சிவக்கா அப்பளமே
எங்கெங்கு அலைந்தே தேடினும்
அங்கெலாங் கிடையாத் தாவரமே
அங்கமதில் பங்கதுவாய் எப்பிறப்பும்
இங்கிதமாய் வந்திடவே தாவரமே!

ஆகாய நடுக்கம்

காயமின்றித் தொலைகை சுகத்தின் உச்சம்
மிச்சமின்றித் தீர்வதிலே இன்பமே மிச்சம்
கோடிப்பேர் கோடிப்பேர் கொண்டு கோடியிற்
றொழுதுங் காணான் ஒளியுந் தொழிலான்
ஒளிய விரும்பும் ஒளியான் இருளான்
வளர்ந்த நகம் வெட்டி எரிதலாய்
நிலமது நடுங்கி நலமது நீக்கும்
இருப்பு நடுங்கின் இன்பம் ஒடுங்குமாயின்
இன்மை நடுங்கின் துன்பம் ஒடுங்குமோ?
இருப்பின் நடுக்கம் மற்றோர் துவ‌க்கமாயின்
இன்மை நடுக்கம் மற்றோர் முடிவோ?

புதன், மார்ச் 05, 2014

ஓட்டைப் பாத்திரங்கள்...

ஓட்டைப் பாத்திரங்கள்...



அழுக்குக் கடலில் கிழிசல் பாலங்கள்
வெற்று வெளியில் நிணநீர்ப் பாளங்கள்
மட்டை மயிர்கள் நகக்கண் துருக்கள்
பட்டைச் சருமம் பழுப்பு விழிகள்
ஈமொய்க்கும் புண்மேல் இருக்கும் கவனம்
செக்கு மாடாய் அசைபோடும் மந்திரம்
வட்டியால் தட்டி வாழ்வு வழுக்கியோர்
கள்ளக் காதல் துணையைப் பொறாதோர்
எற்றிய பிள்ளைப் பேய்கள் வெட்டியோர்
இல்லாள் மறைவால் இல்லம் மறந்தோர்
திருடனாய் இருந்து திருந்த நினைத்தோர்
மணநோய் முற்றி மனநோய் கொண்டோர்
வைத்தியம் இல்லாப் பைத்தியம் பிடித்தோர்
கால்கை இருந்தும் முடமாய் இருந்தோர்
பலகலை கற்றும் அசடாய்த் திரிந்தோர்
சித்தம் விளக்கிச் சித்தராய் விளங்குவோர்
கோடியில் புரண்டு கோடியில் புரள்வோர்
காசெலாங் கரைத்து நோயில் விழுந்தோர்
சுகதேசி ஆனதாலே பரதேசி யானோர்
முகவரி தொலைத்தே முகவரி கண்டோர்
ஏதிலியாய்ப் புகுநாட்டில் புகலிடம் பயந்தோர்
அகாரணப் பிறழ்வால் கரணம் பிழைத்தோர்
எதிர்பாரா விபத்தில் வாழக்கை இழந்தோர்
வெறும்பை சுமக்காது வெறுப்பைச் சுமந்தோர்
தாய்ப்பால் வறண்டிடச் சுடுவெயில் அலைந்தோர்
இவர்வகை இன்னும் எத்தனை எத்தனையோ ?
ஏற்பது இகழ்வெனும் அவமானந் துறந்தோர்
எதிர்காலம் ஏதெனும் கேள்வி மறந்தோர்
ஏனிப்படி என்றே பார்வையால் கேட்டேன்!
ஒருவேளைச் சோறு போட்டால் போடு
இல்லையேல் எனக்குண்டு தெருவிலே வீடு
வாய்திறவா ஏளனச் சிரிப்பாய் எதிரொலி
அழுக்கறத் தெள்ளெனப் புரிந்த சூக்குமம்
நீயும் பிச்சை நானும் பிச்சை.

வியாழன், ஜனவரி 23, 2014

ஆனந்தக் கண்ணீர்!

ஆனந்தக் கண்ணீர்!

நகர்ந்து பரவும் பூதக் குன்றுகள்
சுழித்து வீசும் காற்றின் அரவம்
பகலில் வெப்பம் இரவில் நடுக்கம்
என்றும் காண்பது அங்கே உச்சம்

மணலாட்சி செய்யும் பாலை சூழ‌
இராசபுதன இராசர் வழிவழி ஆளக்
குணமாட்சி செய்யும் அரசின் கீழாய்ச்
சிறந்த கேத்ரி நாடே நாடென்பர்

எட்டா ராஜ்ஜியத்தின் எட்டாவது அரசன்
அஜித்சிங்.
அசைக்க முடியாப் பெயருடையோன்
அசைந்து கொடுக்கும் மனமுடையோன்
இசையில் மயங்கும் குணமுடையோன்
கல்வி கேள்வியிற் சிறப்புடையோன்
உயர்ந்தோர் மதிக்கும் பண்புடையோன்

அன்றொருநாள்;
கொளுத்திய வெயில் மங்கிய‌ மாலை;
பிரதாப சிங்கெனும் ஜோத்பூர் இராசனுடன்
அரைமணிப் பேட்டி கண்டான்.
இடையில் வந்தது சீட்டொன்று.
துறவி வந்துளார் காணவென்று.
பொறுக்கச் சொன்னான்!
அவரும் பொறுத்தார்.
பேட்டி முடிந்திற்று. அழைத்தான் துறவியை.
துறவியும் வேந்தனும் சிறிதாய்ப் பேசினர்.
அஜித்துக்கு அது காணவில்லை!
கொஞ்சம் அதிகமாய்ப் பேசினர்.
அதுவும் அவனுக்குப் போதவில்லை!
அஜித் எதைத் தொட்டாலும்
துறவி அதை முடித்தார்.
வியப்பில் வேந்தன் தனையே மறந்தான்.
இராப்பொழுதும் ஆனது.
கடமை கருதி இருவரும் பிரிந்தனர்.
ஒருநாள் இருநாளல்லாது ஆறு மாதமாய்த்
தேசாந்திரத் துறவி ஓரிடம் நிலைத்தார்!
வேந்தனுடன் நட்புப் பாலம் அமைத்தார்.
அடிக்கடி நடந்தது விவாத மேடை.
இருவர் நாவிற்கும் ஓடியோடி
நாமகள் களைத்திருப்பாள்
அவர் களைத்திருக்க மாட்டார்.

துறவிக்கும் கடமை அழைத்தது.
ஒரே நட்பிவர் எனக் கொண்டார்.
பிரியாவிடை பெற்றுப் பிரிந்தார்.

கோடைகள் இரண்டு கடந்தன.
அன்றோ துறவி வந்தது
அஜித்துக்கும் தெரியாது!
இன்றோ துறவி வருவது
பாலையின் மணலும் அறிந்தது.
ஊரெங்கும் கோலம் போட்டு
ஊர்வலமாய்க் கூட்டி வந்தான் அஜித்
துறவி நெளிந்தார்.
நட்பின் பெருமை வியந்தார்.
ஈதென பிரமாதம்?
நாளை அரசவை பாரீர்.
இன்று சற்றே ஆறுவீர் என்றான்.

இசையென்றால் இளகுவான் அஜித்
அதிலும் அவள் இசையென்றால் போதும்!
இனிப்பிற் குறைவிலாமல்
திகட்டும் கறையிலாமல்
தித்திப்பு புரண்டோடும் அவளிசையில்!
பாலைக் காற்றின் சுருதி கொண்டே
அவள் தேங்குரலெடுத்துப் பாடுகையில்
மயங்கித் தீபங்கள் அசையா
ரசிப்போர் மனங்களும் அசையா
அவர்தம் தலைமட்டும் அசையும்!

முத்து பிறப்பதும் சிப்பியில் தானே?
தாமரை மலர்வதும் சேற்றில் தானே?
வைரம் வளர்வதும் மண்ணில் தானே?
அவள்தம் பிறப்பும் அப்படித் தானே!

இரவு விருந்தில் அரசன் பாடினான்
அவள் புகழை.
துறவி மீண்டும் நெளிந்தார்.
நாளை அரசவை
தாசியின் தரவாலும் துறவியின் வரவாலும்
சிறக்கும் என்றான்.
துறவிக்கு ஈது அடுக்காது என்றார்!
தரும விரோதமென்றார்.
நட்புக்காய் வரவேண்டும் என்றான்.
காலுக்கும் அரை மனதாய்ச் சரியென்றார்.

அந்தப்புரக் காவலர் மூலம்
இச்சேதி கேட்டாள் இசையரசி.
தன்குலங் கருதி கண்ணீர் சுரந்தாள்.
ஒருசொட்டும் வழியாது
கண்ணிலே நிறுத்திக் கொண்டாள்!
மிடக்கிட்டு விழுங்கினாள்!
நாமகளைக் கரந்தொழுதாள்.
சூர்தாசன் ஏடொன்றைப் புரட்டினாள்.
அகமதன் மலர்ச்சி முகத்திலும் கொண்டு
நிம்மதியாய்க் கண்ணயர்ந்தாள்.

காலை விடிந்தது.
அரசவை நிறைந்தது.
மன்னனுக்கும் துறவிக்கும்
கூட்டினர் கட்டியம்.
துறவி தன்நிலையால் நிலையின்றிக்
கண்குனிந்திருந்தார்.

கச்சேரி துவங்கிற்று.
ஆலாபனை துவங்கினாள்.
சொல்லிலாக் கீதத்தில்
சொல்லவொணா மயக்கத்தில்
அரசவை ரசித்திருத்த வேளையில்
இராசபுதனன் அரசவையில்
மாசிலாத் துறவிமுன்னே
மக்கள் நிறைந்திருக்க‌
நெஞ்சில் நிறைவோடு
ஞானவேந்தன் சூர்தாசன்
பாடலைப் பாடினாள்.

ஓ! இறைவா!
நன்மை தீமை நீயும் பார்ப்பாயோ?
நீர் அறியுமோ சாக்கடை கங்கையென்றே?
கொல்லன் அறிவானோ
இருப்புக்கோ அறுப்புக்கோ என்று?
உரைகல் அறியுமோ பொன்னின் பெருமை?
நீ அறிவாய் அனைத்தும் ஒன்றென்றே!
சமநிலையில் நீயின்றேல் நானெங்கே?

ஞான ராகம் இசைத்தே மெய்மறந்தாள்!
பாடல் முடிந்ததும் கண்கள் திறந்தாள்!
கைகுவித்து முன்னே நின்றிருந்தார் துறவி!
அம்மா மாதரசி! தேவ‌இசைக் கலையரசி!
கலைகள் யாவும் ஏதேதோ கற்றறிந்தேன்.
ஞானம் ஈதென்று இன்றுதான் அறிந்தேன்!
எம்மை வாழ்த்தி எனக்கும் அருள்வாயாக
என்றே துணிந்து வணங்கி நின்றார்!

பணிந்த துறவியின் பெருமை கண்டு
அகத்தில் மகிழ்ந்து புறத்தில் ஆங்கே
கலைமகள் கண்களில் வழிந்தது கண்ணீர்!
பாரதப் புதல்வனைத் திருத்திய கண்ணீர்
அஃது ஆனந்தக் கண்ணீர்!

துறவியின் பெயரோ நரேந்திரன்
பின்னாளில் அவரே விவேகானந்தன்!
இந்நிகழ்வு நடந்தது ஆண்டு 1893ல்.

அஜித் சிங்
படம்

துறவி
படம்

நிகழ்வு பற்றிய ஆதாரத் தகவு: http://en.wikipedia.org/wiki/Ajit_Singh_of_Khetri